மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று தெரியாதவர்கள் தான் குடிக்கின்றார்களா !


“மது அருந்துவது உடன் நலத்திற்கு தீங்கானது “என்று மது குடுவையில் இருக்கும் வாசகத்தை படித்துவிட்டு எத்தனை பேர் குடியை நிறுத்திவிட்டார்கள் ?இல்லை என்றால் ஏன் தொடர்ந்து அச்சிட வேண்டும் ?இது அரசின் கடமை நான் சொல்வதை நீ கேட்க மாட்டாய் இருப்பினும் நான் சொல்வது எனது கடமை என்பதின் வெளிப்பாடே இது.

மதுவுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது மக்களை மது போதையில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அல்ல, தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காகவே மதுவை கொடுத்து கூட்டத்தைக் கூட்டி மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.

அரசியல் கட்சிகளைப் போல் பல தன்னார்வ நிறுவனங்களும் தன்னுடைய சுயநலனுக்காக தான் இருப்பதை மக்களிடம் காட்டிக்கொள்ள மதுவுக்கு எதிராக பல சொற்பொழிவுகளையும், ஆடல், பாடல்கள் மூலமும், நாடகங்கள் மூலமும் மதுவின் தீமையை மக்களிடம் சொல்கின்றார்கள்.

மக்களுக்கு மதுவைப் பற்றிய தீமைகள் தெரியாததால் தான் மதுவை குடிக்கின்றார்கள் என்றால்,மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு செய்கின்றவர்களில் பலர் மது பழக்கம் உள்ளவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?

மது பழக்கம் உள்ளவர்கள் மதுவின் தீமைகள் பற்றி தெரியாதவர்கள் அல்ல,மக்களை வழிநடத்திய, நடத்துகின்ற, மிகப்பெரிய அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மிகப்பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள் என்று பலரும் மதுவிற்கும்,புகைப்பிடித்தலுக்கும், போதைப்பொருள் பயன்படுத்துதலுக்கும் அடிமையாக இருந்ததும், இருப்பதும் மதுவின் தீமையை பற்றிய அறியாமையில் அல்ல. பிறகு ஏன் மக்கள் குடித்தால் மட்டும் அறியாமையில் இருக்கின்றார்கள் என்று சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் ?
மக்களை அறிவில்லாதவர்களாக எண்ணி உபதேசம் செய்வது தன்னை உயர்த்திக் கொள்ளவா?

நாம் உட்கொள்ளும் மருந்தின் காலக்கெடு முடிவு அடைந்து விட்டால் உடல் நலனுக்கு கேடு என்று உட்கொள்வதை தவிர்க்கும் நாம்,மது குடுவையில் மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு என்று எழுதியிருப்பதை படித்துவிட்டு குடிப்பதை தவிர்க்காதது ஏன் ?மது அருந்துவதால் பெரும் இன்ப உணர்வை அறிவால் வெல்ல முடியாமல் தோல்வி அடைவதே மது அருந்துவதற்கு காரணம் !
மதுப்பழக்கம் மட்டுமல்ல உணவு கட்டுப்பாடு இல்லாமல் விரும்பிய அனைத்தையும் சாப்பிடுவதும் அறிவின் தோல்வியே காரணம் !
வாகனத்தை வேகமாக இயக்குவது ஆபத்து என்று தெரிந்தும் வேகமாக ஓட்டுவது அறிவின் தோல்வியை காரணம்!
உழைப்பை தவிர்த்து சோம்பலில் வாழ்வதும் அறிவின் தோல்வியே காரணம் !
பொய் சொல்லுவதும், திருடுவதும், ஏமாற்றுவதும், அறிவின் தோல்வி தோல்வியே காரணம் !
திருமணத்துக்கு முன் காதலிப்பதும், திருமணத்துக்குப் பிறகு கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வதும் அறிவின் தோல்வியே காரணம் !
தனக்கு எது நன்மையோ அதையே சரி என்று எண்ணுவதும் அறிவின் தோல்வியே காரணம் !
அது போல் நம் ஒழுக்ககேடான அனைத்து செயலுக்கும் அறிவின் தோல்வியே காரணம் !

பிறப்பால் மட்டுமே உணர்வுகளை பெறுகின்றோம்,அனுபவத்தால் மட்டுமே அறிவை பெறுகின்றோம். செல்வத்தை அதிகம் சம்பாதிக்க வேண்டும், உயர் பதவியை அடைய வேண்டும், பேரும், புகழும் பெற்று வாழ வேண்டும், என்று கனவு காண்பது பிறப்பால் நாம் அனைவரும் பெற்றிருக்கும் உணர்வு இதை யாரும் அறிவால் பெற வேண்டியது இல்லை.எனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை பார்த்து “கனவு காணுங்கள் “என்று சொல்லியதும்,மதுவின் தீமைகள் பற்றி மக்களுக்கு அறிவில்லை என்று எண்ணி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் ஒன்று.இரண்டாலும் எந்த பயனும் யாரும் அடைந்தது இல்லை.

உணர்வின் ஆளுமையால் கனவு கண்டவர்கள் கனவை அடைய முடியாமல் வேதனை படுகின்றார்கள், மதுவிலிருந்து விடுபட நினைப்பவர்கள் விடுபட முடியாமல் பணம், பேர், புகழ், தொழில், ஆரோக்கியம், குடும்பம் என்று இறுதியில் உயிரையே இழக்கின்றார்கள்.

உங்களுடைய கனவு நிறைவேற வேண்டும் என்றால் !
மதுவிலிருந்து விடுதலையாக வேண்டும் என்றால் !
நான் எழுதிய “மதுவிலிருந்து விடுதலை “என்ற கட்டுரையை படித்து பயன் பெறுங்கள்.

Category: